வேலூரில் பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தலைமை பெண் காவலர் இளவரசி, அவருக்கு உதவிய பெண் காவலர் சாந்தி, உதவி ஆய்வாளர் பத்மநாதன் ஆகியோரை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 
தமிழகம்

வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலரை நேரில் அழைத்து டிஜிபி பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: வேலூரில் பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் தலைமை காவலரை, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டினார். வேலூர் தெற்கு காவல் நிலையதலைமைக் காவலர் இளவரசி. இவர் கடந்த 17-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது, காவல் நிலையம் எதிரே ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, சாலை ஓரத்தில் சுமார்35 வயதுள்ள பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக, உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார் இளவரசி. அவர்கள் 108 ஆம்புலன்ஸை அழைப்பதற்குள், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், பெண் காவலர்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயையும், குழந்தையையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் இதர பொருட்களை காவலர்களே வாங்கிக் கொடுத்தனர். இந்நிலையில், தலைமை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு இத்தகவல் தெரியவந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் தலைமை காவலர் இளவரசி, பெண் காவலர் சாந்திஆகியோரை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று நேரில் அழைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி அவர்களது மனிதாபிமான செயலை பாராட்டினார்.

SCROLL FOR NEXT