சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய வடக்கு வாசல் பகுதி ஈ.வே.ரா. சாலையில் ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் (காவல் ஆணையர் அலுவலகம் அருகில்) நெடுஞ்சாலை துறையினர் இன்று (17-ம் தேதி) இரவு 10 மணி முதல் வரும் 19-ம் தேதி காலை 5 மணிவரை பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே, இந்த பகுதியில் இன்று இரவு 10 மணி முதல் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு:
ஈ.வே.ரா. சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசப்பிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈ.வே.ரா. சாலையில் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.
அத்தகைய வாகனங்கள் ஈ.வே.ரா. சாலையில் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம், உடுப்பி பாயின்ட், இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, காந்தி இர்வின் சிக்னல் சந்திப்பு, இடதுபுறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் மற்றும் ஈ.வே.ரா. சாலை வழியாக செல்லலாம். வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்புவழங்க வேண்டும் என அதில் போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.