தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி, அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரவீணா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு பிரச்சாரம் செய்யவும், வாக்கு சேகரிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் நான் பிரச்சாரம் செய்ய தேர்தல் அதிகாரி எனக்கு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே இத்தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். அந்த வெற்றியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தனி நீதிபதி முன்பு நடந்தது. மனுதாரரான பிரவீணா ஆஜராகி, ‘‘முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று வீடு திரும்பிய பிறகு விசாரணையை நடத்தலாம். அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். வழக்கை தொடர்ந்து நடத்த தயாராக இருப்பதாக முதல்வர் தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எந்த நோட்டீஸும் தங்களுக்கு வரவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்த தால், தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.