அண்ணா பிறந்தநாளில் ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கிய் சசிகலா 
தமிழகம்

'ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக உரிமை கொண்டாடுகிறது' - சசிகலா சாடல்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு தாம் செய்ததாகக் கூறி உரிமை கொண்டாடுவது நல்லதல்ல என்று சசிகலா விமர்சித்துள்ளார்.

அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா தனது தஞ்சாவூர் இல்லத்தில் இன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடன் பல்வேறு கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்துப் பேசுகையில், "பேரறிஞர் அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டனர். அதேபோல் அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன்." என்றார்.

ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு, “நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்“ என்றார்.

மேலும் பேசிய அவர், "திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என நான் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களையும் திமுக அரசு தான் செய்வதுபோல் முன்நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல" என்றார்.

எடப்பாடி பழனிசாமி, பழைய பழனிசாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, " அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள் தான் கூற வேண்டும். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT