தமிழகம்

முழுமையாக தடை செய்யப்பட்ட ‘ப்ரீ பையர் ' ஆன்லைன் விளையாட்டை எப்படி விளையாட முடிகிறது? - போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: முழுமையாக தடை செய்யப்பட்ட ‘ப்ரீ பையர்' ஆன்லைன் விளையாட்டை எப்படி தொடர்ந்து விளையாட முடிகிறது? போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் இதாஸ் செலானி வில்சன் (19), நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவரை கடந்த 6-ம் தேதிமுதல் காணவில்லை. இதுகுறித்துவிசாரித்தபோது, என் மகள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ‘ப்ரீ பையர்' விளையாடியதாகவும், அப்போது கன்னியாகுமரி சவேரியார்புரம் சுனாமி காலனியைச் ஜெப்ரின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.

ஜெப்ரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவரையும் காணவில்லை. ஜெப்ரின் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர். அவர் ஆசை வார்த்தை கூறி, என் மகளைக் கடத்தியிருக்கலாம்.

இது தொடர்பாக வடசேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் மகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே, என் மகளை மீட்டு, என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ப்ரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதை எப்படிவிளையாடுகிறார்கள்? சைபர் க்ரைம் போலீஸார் என்ன செய்கிறார்கள்? இதைத் தடுக்காவிட்டால், இளம் தலைமுறையினர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT