நீட் தேர்வு | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப்.7-ம் தேதி வெளியானது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். அதேபோல் மதிப்பெண் அடிப்படையிலும் கடந்த ஆண்டைவிட தமிழகம் பின்தங்கியது. தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழக அரசுப் பள்ளி நிலவரம்: இந்நிலையில், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீத பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய பேருக்கு நெகட்டிவ் மார்க்கிங் முறை இருந்ததுகூட தெரியவில்லை என்ற தகவல்களும் வெளியாகி அரசு பயிற்சி மையங்கள் தரத்தின் மீது கேள்விகளை எழுப்பியது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT