தாம்பரம்: கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முக்கியமானது தாம்பரம். கூடவே பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீண்ட உதவிக்கரங்களாலும் மீட்புக் குழுவினராலும் ஏராளமான மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டனர்.
நீர்நிலைகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பே இந்த வெள்ளப் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கமாக வண்டலூர் மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பீர்க்கன்காரணை, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும். முன்பு பீர்க்கன்காரணை ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் நேரடியாக இரும்புலியூர் ஏரிக்குச் சென்று அங்கிருந்து தாம்பரம் ஏரிக்கு வந்த பின்னர் அடையாறு ஆற்றில் கலக்கும். ஆனால் பீர்க்கன்காரணை, இரும்புலியூர், தாம்பரம் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல தற்போது போதிய வடிகால் வசதி இல்லாததே குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ காரணமானது.
எனவே தாம்பரம் சுற்றுப்பகுதிகளான இரும்புலியூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.84 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்டம் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. நிரந்தரத் தீர்வுக்கு வெள்ள தடுப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான அனுமதியும், நிதி ஒதுக்கீடும் செய்யப்படும் என முதல்வரும் அறிவித்தார்.
ஆனால் இதுவரை இந்த மூடுகால்வாய் திட்டப் பணிகளுக்கு நிதியும் ஒதுக்கவில்லை பணிகளும் நடைபெறவில்லை. எனவே இந்தத் திட்டத்தை உடனே செயல்படுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: பீர்க்கன்காரணை, இரும்புலியூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. நிரந்தர வெள்ளத்தடுப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 2019-20 ம் ஆண்டு இந்த ஏரிகளின் உபரிநீர் நேரடியாக அடையாற்றில் கலக்கும் வகையில் ரூ.84 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்டத்தை தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி பீர்க்கன்காரணை ஏரியிலிருந்து 600 மீட்டர் இரும்புலியூர் ஏரியிலிருந்து 1.5 கிமீ. தொலைவுக்கு பாதாள மூடு கால்வாய் மூலம் உபரிநீர் கால்வாய், இரும்புலியூர் ரயில்வே மேம்பாலம் வரை கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள கால்வாயை அகலப்படுத்த ரயில்வே துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
பின்னர் இரும்புலியூர், வாணியங்குட்டை பகுதியில் இருந்து தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மூடு கால்வாய் மூலம் 1,600 மீட்டர் தூரம் கொண்டு சென்று ஏற்கெனவே முடிச்சூர் சாலையில் உள்ள பாதாள மூடு கால்வாயுடன் இணைக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு இன்னும் செய்யப்படவில்லை. மீண்டும் பெருமழை வந்தால் ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் மீண்டும் பாதிக்கப்படும். இதில் அரசுதான் உரிய முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.