தமிழகம்

கையால் மலம் அள்ளுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

கையால் மலம் அள்ளுவதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஏ.நாகராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கையால் மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதை கண்காணிக்கும் வகையில் மாநிலம் தோறும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வு செய்து இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் இதுவரை கண்காணிப்புக் குழு அமைக்கவில்லை. கையால் மலம் அள்ளுவதை முழுமையாக தடுக்க எந்த திட்டமும் இல்லை.

தொழில்நுட்ப ரீதியிலான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படுவதில்லை.

மதுரை மேலஆவணி மூல வீதி, கோச்சடை ஆகிய பகுதிகளில் அண்மையில் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே கையால் மலம் அள்ளுவதற்குத் தடை விதிக்கவும், மறுவாழ்வு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமர்வு விசாரித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.23-க்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT