வியாசர்பாடி பி.வி. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் பழனி (29). இவர் மீது 2 கொலை வழக்கு உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வியாசர்பாடியில் ரவுடியாக வலம் வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பழனி தீபாவளி பண்டிகையை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடினார். பின்னர், இரவு 9.30 மணிக்கு வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
2013-ம் ஆண்டில் பி.வி.காலனியை சேர்ந்த முத்துபாட்சா என்பவரை பழனியும், அவரது தம்பி சுரேசும் கொலை செய்துள்ளனர். அதேபோல் 2014-ல் புழலில் சரவணன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் பழனி யின் பெயர் இடம் பெற்றது.
மேலும், முன்பு வடசென்னையை கலக்கிய சேரா என்ற ராஜேந்திரனின் மகன் கதிரவ னுக்கும் பழனிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கதிரவன் தன் ஆதரவாளர்கள் மூலம் கொலை செய்துள்ளதாக எங்களுக்கு முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.