திருச்சி: இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்கவே புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என அதன் வரைவுக் குழு தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சி மதி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியது:
அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பர். உலகின் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். இதை சிறப்பாக பயன்படுத்த வேண்டுமென்றால் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற்காகத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இது மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தங்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.