சென்னை: தமிழக உணவுத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கில் செயல்படுகின்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர்ரோந்துப் பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டப்படி தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆக.15 முதல் 21-ம் தேதி வரை ஒரு வாரத்தில் ரூ.10.06 லட்சம் மதிப்புள்ள1,782 குவிண்டால் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுஉள்ளன. மேலும், 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.