பாஜக சார்பில் நடைபெற உள்ள மோடி கபடி லீக் போட்டிக்கான கோப்பையை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிமுகம் செய்துவைத்தார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில், இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட கோப்பையை அண்ணாமலை அறிமுகம் செய்துவைத்து, மோடி கபடி லீக் ஜோதி ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் அண்ணாமலை பேசும்போது, "வெற்றி, தோல்வியை இளைஞர்கள் சமமாகக் கருதுவதற்கான மனநிலையை விளையாட்டுப் போட்டிகள் வளர்க்கின்றன. எனவே, அரசியல் கலப்பின்றி இப்போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் 17 முதல் 30-ம்தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. மாநில அளவிலான இறுதிப்போட்டி மதுரையில் வரும் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சம், 2-வது பரிசாக ரூ.10 லட்சம், 3, 4-வது பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.50,000, 3, 4-வது பரிசாக தலா ரூ.25,000 வழங்கப்பட உள்ளது.
இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, சர்வதேச தரத்திலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, இத்தாலி நாட்டில் ஐபிஎல் போட்டிகளுக்கான கோப்பை தயாரிக்கும் இடத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டுதான் தீர்வு. எனவே, தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளோம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலதுணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, தமிழகபாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.