ஜவ்வாதுமலை அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த நடுகற்கள். 
தமிழகம்

ஜவ்வாதுமலையில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஜவ் வாதுமலையில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி தலைமையில், வணிகவியல் பேராசிரியர் ராஜ்குமார், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் ஆய்வு மாணவர்கள் கொண்ட குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கள ஆய்வு நடத்தியபோது பல்லவர் காலத்து நடுகற்கள் தொடர்ச்சியாக இருப் பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறும் போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை வேலூர் மாவட்டம் அமர்தியில் தொடங்கி, போளூர், செங்கம், ஆலங்காயம் வட்டங்களில் பரவி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் முடிவடைகிறது. ஏறத்தாழ 250 கி.மீ., சுற்றளவு கொண்ட இந்த மலையில் சுமார் 420 மலைக் கிராமங்களும், 2.50 லட்சம் மக்களும் வசிக்கின்றனர். இந்த மலையானது பல்வேறு வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

குறிப்பாக, ஏராளமான பாறை ஓவியங்களும், கற் கோடாரிகள், கற்திட்டைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், நடுகற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகேயுள்ள கூட்டத்தூர் என்ற சிறிய கிராமத்தில் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த கூட்டாத்தூரில் உள்ள ஏரிக்கு மேல் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும், 4 நடுகற்களும் இருப்பதை கண்டெடுத்துள்ளோம். கொற்றவை சிலையானது, ஆநிரை மற்றும் நாட்டை பிடிக்கும் போரில் வெற்றி பெற வேண்டி கொற்றவை போர் மறவர்கள் வணங்குவது மரபு ஆகும்.

அந்த வகையில், பல்லவர் காலத்து கலை நுணுக்கத்துடன் இந்த கொற்றவை சிலை உள்ளது. இந்த சிலையானது 37 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்ட பலகைக்கல்லில் உள்ளது. இதில், உள்ள எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் முழுமையாக படிக்க முடிய வில்லை.

இச்சிலையில் வலதுபக்கம் முடிக்கப்பட்ட கொண்டையுடனும், இடது கையை இடுப்பில் ஊன்றியும், வலது கையில் கத்தியை தாங்கியும் உள்ளது. இடுப்புக்கு கீழ் பகுதியில் மண்ணில் ஆழமாக புதைந்துள்ளது. 2-வது நடுக்கல் 2-ஆக உடைந்துள்ளது. இந்த கல்லானது 37 அங்குலமும் உயரமும், 28 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளது. இந்த நடுகல்லில் எழுத்துகள் சிதைந்த நிலையிலேயே உள்ளது.

3-வது நடுக்கல்லானது 40 அங்குலம் உயரமும், 24 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது.இதில் உள்ள வீரனின் வலது கையில் குறுவாளுடன் போர் கோலத்துடனும், இடது கையில் வில்லும் கொண்டுள்ளது.

4 -வது நடுகல் 40 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது.இதில் உள்ள வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்டுள்ளது.

5-வது நடுகல்லானது 50 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. இதில் உள்ள வீரன் வலது பக்க கொண்டையுடன், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லுடன் காட்சித் தருகிறார்.

இந்த வீரனின் கழுத்துப்பகுதி யில் ஒரு அம்பும், வயிற்றுப் பகுதியில் ஒரு அம்பும் பாய்ந் துள்ளதைப்போல காட்சி சித்தரிக் கப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை. இந்த 5 நடுகற்களுக்கு அருகே கூடுதலாக 2 நடுகற்கள் உள்ளன. அதில், முதல் நடுகல் 5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் வீரன் தனது 2 கைகளால் இரண்டு மாடுகளை பிடித்துக்கொண்டுள்ளதைபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற் றொரு நடுகல் 2- ஆக உடைந் துள்து. அதில் ஒரு பாகம் மட்டுமே காணமுடிந்தது. இந்த நடுகற்கள் விஜயநகர காலத்தைச் சேர்ந்த உடன்கட்டை நடுகல்லாகும்.

இந்த அரிய வகை நடுகற்களை ஆய்வு செய்தால் மேலும் கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் நடுகற்களை ஆய்வுப்படுத்த முன்வர வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT