தமிழகம்

அதிமுக அலுவலக மோதல் குறித்து விசாரிக்க ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு சிபிசிஐடி விரைவில் சம்மன்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து விசாரிப்பதற்காக, ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு சிபிசிஐடி விரைவில் சம்மன் அனுப்ப உள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்தது. அன்றைய தினம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 400 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மோதல் சம்பவம் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் அகற்றப்பட்டு, இபிஎஸ் வசம் அதிமுகஅலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு இருந்த முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் கொடுத்தார்.

இதன்பேரில், ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் மீதுசட்ட விரோதமாக கூடுதல், கலகம்செய்தல், கட்டிடங்களில் திருடுதல்,தகராறு செய்து இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.

வீடியோ, புகைப்படங்கள்

இதற்கிடையில், அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடங்கினர். விசாரணைஅதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான தனிப்படை போலீஸார் அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்ளிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதிமுக அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT