சென்னை: தமிழகத்தில் 8,400 ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல வாழ்வு மையங்கள் அமைக்கும் திட்டத்தில் 7,052 சுகாதார நல வாழ்வு மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார நல வாழ்வு மையங்களை அமைத்து வருகிறது. இதன்படி கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்கள் ஆயுஷ்மான் பாரத் - சுகாதார நல வாழ்வு மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி வரும் டிசம்பருக்குள் நாட்டில் 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல வாழ்வு மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 8,579 துணை சுகாதார மைங்கள் மற்றும் 1,372 ஆரம்ப சுகாதார மையங்கள் என்று மொத்தம் 9,951 மையங்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார நல வாழ்வு மையங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 5,936 துணை சுகாதார மையங்கள் மற்றும் 1,354 ஆரம்ப சுகாதார மையங்கள் சுகாதார நல வாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,560 துணை சுகாதார மையங்கள் மற்றும் 1,841 ஆரம்ப சுகாதார மையங்கள் என்று மொத்தம் 8,401 மையங்கள் சுகாதார நல வாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுவருகிறது. இதில் 5,211 துணை சுகாதார மையங்கள் மற்றும் 1841 ஆரம்ப சுகாதார மையங்கள் என்று மொத்தம் 7,052 மையங்கள் சுகாதார நல வாழ்வு மையங்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.