சென்னை: "ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.நெற்கட்டும் செவலில் நினைவு மாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு. இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி புகழாரம்: பூலித்தேவரின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ட்விட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.