தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின்வாங்கக் கூடாது: பாரிவேந்தர், சரத்குமார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலிருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

பாரிவேந்தர்:

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் (அக்.3) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு ஏற்கெனவே 3 நீதி பதிகள் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருப்பதால், அதுதொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிடமுடியாது என வாதிட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையில் ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதில், இருக்கும் சாதக, பாதகங்களில் ஒருபோதும் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது என்பதுடன், தமிழகம் தொடர்ந்து கர்நாடகத்தின் வஞ் சகப் போக்குக்கு ஆளாக நேரிடும். எனவே, மத்திய அரசு பின்வாங் காமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரத்குமார்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் மேலாண்மை வாரி யம் அமைக்க உத்தரவிட முடியாது என்று நீதிமன்றத்தில் கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது தமி ழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். எனவே, தமிழக விவசாயிகளின் அடிப்படை தேவையை கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்தப் பிரச்சினையை எந்த அரசியல் குறுக்கீடும் இன்றி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார்:

சட்டப் படியும், நியாயப்படியும் காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு நடந்திருக்க வேண்டும். மலிவு அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் மிகப்பெரிய மாண்பை மத்திய அரசு அழித்துவிட்டது. இதை தமிழகமும் விவசாயிகளும் மன்னிக்க மாட்டார்கள்.

SCROLL FOR NEXT