தமிழகம்

'எனக்கு முதல்வராக வேண்டுமென்ற எண்ணம் இல்லை' - ஓபிஎஸ்

செய்திப்பிரிவு

தேனி: "ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ கூட்டமோ, அல்லது ஒரு குடும்பமோ இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால், அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் முதல்வராக வேண்டும், நான்தான் தலைவராக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்து பயணித்தவர்கள், இந்த இயக்கத்திற்காக உழைத்தவர்கள், அனைவரையும் ஒன்று சேருங்கள்.

கடந்த 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பட்டப்பகலில் வத்தலக்குண்டு ஆறுமுகம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படி பல்வேறு தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் இந்த இயக்கம்.

ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ கூட்டமோ, அல்லது ஒரு குடும்பமோ இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால், அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT