தமிழகம்

ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ சீட் ஒதுக்கீடு - உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ சீட் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அடிப்படையில் தனக்கு மருத்துவப் படிப்பில் இடம் வழங்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சிவசூர்யா என்பவர் உயர் நீதிமன்றகிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர். 2021-ல் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

பாகுபாடு கூடாது

கலை, விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 2 இடங்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த இடஒதுக்கீடு மத்திய அரசின் கொள்கை முடிவு. சாதனை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டக்கூடாது.

மனுதாரர் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இடஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்து உள்ளார். அந்த இடங்களுக்கு பயன் பெறுபவர்களை கண்டறிய முடிவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மேலும் மனுதாரர் 2016-ல் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்றுள்ளார். இதனால் மனுதாரர் அந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர். இதனால் மனுதாரருக்கு அடுத்தக் கல்வியாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT