தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு | தாளாளர் உள்பட 5 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மரணமடைந்தார். இது தொடர்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பள்ளியின் தாளாளார், செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாணவியின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தனர். மேலும் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து ஜிப்மர் மருத்துவக்குழுவின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மாணவியின் மரணத்தில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT