சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் 6 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ள தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகி விட்டது.
கடந்த 6 மாதங்களாக ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்ட ரீதியாக அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், மாநில அளவில் அல்லது மண்டல அளவில் ஆணையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், இதுதொடர்பாக மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.