ஆலப்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் செயல்பாட்டை செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தொடங்கி வைத்தார். 
தமிழகம்

ஆலப்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட செயல்பாடு தொடக்கம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் நேற்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் நேற்று தொடங்கிவைத்தார்.

ஊரகப் பகுதிகளில் தூய்மையான குடிநீர், சுகாதாரம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் நம்ம ஊரு சூப்பரு முகாம்கள் நடத்தி ஊரகப் பகுதிகளில் தூய்மையை பராமரிக்கவும், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், அதன் மூலம் சுகாதாரம், உற்பத்தி திறன்,

பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு தேவையானவற்றை உயர்த்துவதற்கும், வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முகாம்கள் நடத்த அறிவுறுத்தல்

அதன்படி 02-09-2022 முடிய ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், அரசுக் கட்டிடங்களில் முகாம்கள் நடத்தி தூய்மையை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் பயனடையும் இதர துறைகளான தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்டம்.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய்த் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூகநலம், வனத்துறை, உணவு பாதுகாப்பு, சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குழநீர் விநியோகத் துறை, பொதுப்பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து முகாம்களை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், எம்எல்ஏ வரலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT