தமிழகம்

பெண்களுக்கான மாநிலக் கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ‘பெண்களின் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: தமிழகத்தில் எண்ணற்ற பெண்ஆளுமைகள் சங்க காலம் தொடங்கி தற்போதுவரை இருக்கின்றனர். ஆனால், அதிக இடங்களில் பெண்களுக்கான வரலாறு புறந்தள்ளப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான மாநிலக் கொள்கையை சமூகநலத் துறைவிரைவில் வெளியிட உள்ளது. பெண்கள் உயர்கல்வி பெறமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்உட்பட பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசியலில் பெண்கள் பங்கேற்கவும், அதிகாரம் பெறவும் தலைமைப் பண்போடு முன்னேறவும் திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளது.

மாற்றம் வரவேண்டும்

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் உள்ளன. தமிழகத்தை ஒப்பிடும்போது பிற மாநிலங்கள் அதிகஅளவில் முன்னேற வேண்டியுள்ளது.

சமூக மாற்றத்தோடு இணைந்துதான் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக் கருத்தரங்கில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT