தமிழகம்

டீலர் கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடத்த பெட்ரோல் விற்பனையாளர்கள் முடிவு

செய்திப்பிரிவு

பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடத்த பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.24 ரூபாயும், டீசலுக்கு 1.40 பைசாவும் டீலர் கமிஷனாக வழங்குகின்றன. இத்தொகை மிகக் குறைவாக உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இத்தொகையை அதிகரித்துத் தருமாறு மத்திய அரசு அமைத்த குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை கமிஷன் தொகையை உயர்த்தித் தர எண்ணெய் நிறுவனங்கள் முன்வரவில்லை.

எனவே இதனை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 19 மற்றும் 26-ம் தேதிகளில் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.

நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும். மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பெட் ரோலிய பொருட்கள் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

நவம்பர் 5-ம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். அத்துடன், அன்று முதல் விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகள் அணைக்கப்படும். மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் விற் பனையை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு முரளி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT