தமிழகம்

குரூப்-1 பணிக்கான முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: குரூப் -1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 22) நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டு துணை ஆட்சியர் (18), கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), வணிகவரி உதவி ஆணையர் (25) உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் - தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 22) முடிவடைகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in /www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT