சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாய்வுக் குழிகளை மூடும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. மூன்றாம்கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய அரசின் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு சார்பில் கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலா ளர்கள் ராஜேஷ், வீரராகவன், கல்லூரி ஆய்வு மாணவர்கள் அகழ்வாராய்ச்சி யில் ஈடுபட்டனர். மதுரையின் பழமை, சங்க காலத் தமிழர்களின் நாகரிகம், வாழிடம் குறித்த அகழ்வாராய்ச்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றன.
இதில் 102 அகழ்வாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இதுவரை 5,300 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள், வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோம் நாட்டின் உயர் ரக ரவுலட், அரிட்டைன் மண்பாண்ட ஓடு கள், யானை தந்தம் மூலம் தயாரிக்கப் பட்ட தாயக்கட்டைகள், சீப்பு, சுடுமண் முத்திரைகள், முத்து, பவள மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரைகள் ஆகிய தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் ஹரப்பாவைவிட சிறப்புடைய சுடுமண் கழிவுநீர் குழாய்களும் கிடைத்துள்ளன. நெசவுத் தொழிலில் பயன்படும் நூல் நூற்கும் கருவிகள், இயற்கைச் சாயமூட்டுவதற்கு உரிய பல கட்டிட அமைப்புகளும் கிடைத்துள்ளன. ஒரு தொழிற்கூடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும் அக்கால மக்கள் பயன்படுத்திய தங்க மணிகளும் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘தி இந்து’விடம் கூறும் போது, “அகழ்வாய்வு செய்வதற்கு இடங்களை வழங்கி உதவியவர்களிடம் இடத்தை ஒப்படைக்கும் வகையில் அகழ்வாய்வுக் குழிகளை மூடிக் கொடுத் துள்ளோம். அடுத்த ஆண்டு மூன்றாம் கட்ட அகழ்வாய்வு செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்றார்.
அருங்காட்சியகம்
ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று கீழடியில் அகழ்வாய்வு நடைபெற வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் கள் எதிர்பார்க்கின்றனர். குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்தால்தான் கூடுதல் தொல்பொருட்கள் கிடைக் கும். இதை வைத்து அருங்காட்சியகம் அமைக்கலாம். மேலும் மத்திய, மாநில அரசுகள் முன்வந்து இடங்களை கைய கப்படுத்திக் கொடுத்து கள அருங்காட்சி யகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூடப்பட்டது ஏன்?
தனியார் நிலங்களில் அகழ்வாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவர்கள் அகழ்வாய்வு செய்வதற்கு நிலத்தைக் கொடுத்து உதவினர். அவர்களிடம் செய்த ஒப்பந்தப்படி குழிகளை மூடிக் கொடுக்க வேண்டும். அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகளை மூடும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.