சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு உதவி யாளரை திரும்பப் பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலி்ன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1979-ம் ஆண்டு அரசு ஆணைப் படி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கென தனியாக சிறப்பு உதவியாளரை நியமித்துக் கொள்ள வழிவகை உள்ளது. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு அரசு சார்பில் சிறப்பு உதவியாளராக தலைமைச் செயலக பணியில் உள்ள எம்.ஆதிசேஷன் என்பவர் துணைச் செயலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டோம். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி திமுக சார்பில் சட்டப்பேரவை வளாகத் திலேயே போராட்டம் நடத்தினோம். இதனால் கோபமடைந்த தமிழக அரசு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு என நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளரை திரும்பப் பெற்றதுடன் அவரை பதவி யிறக்கமும் செய்தது. இது சட்ட விரோதமானது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கென உள்ள மதிப்பைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு மீண்டும் துணைச் செய லர் ஒரு அந்தஸ்தில் சிறப்பு உதவி யாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந் தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு நடந்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளரை திரும்பப் பெற்றது சட்ட விரோதமானது” என்றார். அதையடுத்து சட்டப் பேரவைச் செயலர் தரப்பு வாதத்துக்காக விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.