தமிழகம்

விமர்சனத்தைத் தொடர்ந்து பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம்: போக்குவரத்துத் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: விமர்சனத்தை தொடர்ந்து பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக பேருந்து முன்பும், பின்பும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிங்க் பேருந்துகளில் முழுமையாக அல்லாமல் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மட்டும் வண்ணம் தீட்டப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.

அவசரகோலத்தில் இப்படி அரைகுறையாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்தனர். மேலும் இந்தப் பேருந்துகளின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டு கேலிப் பதிவுகளும் பகிரப்பட்டன. இந்நிலையில் பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.விரைவில் அனைத்து பேருந்துகளிலும் முழுமையான பிங்க் வண்ணம் தீட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT