தமிழகம்

75-வது சுதந்திர தினம்: சென்னையில் களைகட்டிய இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளம் எதிரே இரண்டாம் நாள் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஆக.11) நடைபெற்றது.

75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி: சுதந்திர தின விழாவில், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி இடம்பெறும். இதற்கான முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியன்று நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.சுதந்திர தின அணிவகுப்பில் தமிழக முதல்வரை, காவல்துறை வாகனத்தில் அவரது இல்லத்தில் இருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரிப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகைகளும் நடைபெற்றன.

இதையடுத்து முதல்வர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற ஒத்திகை நடைபெற்றது.

போக்குவரத்து மாற்றம்: சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெற்றது. இதற்காக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT