தமிழகம்

“தேசியக் கொடி, தேச ஒற்றுமை மீது திமுகவினருக்கு முழு நம்பிக்கை இல்லை” - வானதி சீனிவாசன்

செய்திப்பிரிவு

சென்னை: "திமுகவினருக்கு அடிப்படையிலேயே தேசிய கொடியின் மீதோ, தேச ஒற்றுமையின் மீதோ ஒரு முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறோம், அதனை சுட்டிக்காட்டியிருக்கிறோம்" என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்திய மகளிர் வாகன பேரணியை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இந்த பேரணி சென்னையில் தொடங்கும் இந்த பேரணி திருவிடந்தை வரை நடைபெறவுள்ளது.பேரணியை தொடங்கிவைத்த பின்னர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: "இந்த நாட்டினுடைய தேசிய கொடி என்பது அனைவருக்கும் சொந்தமானது. தமிழகத்தில் தேசியக் கொடியை மாநிலங்களில் ஏற்றுவதற்கு நாங்கள் உரிமையைப் பெற்றுத் தந்தோம் என்று திமுக கூறினால், ரொம்ப பெருமையாக அவர்களுடைய டிபியாக (Display picture) வைக்கலாம்.

அதில், திமுகவினருக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்று சொன்னால், அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசியக் கொடியின் மீதோ, தேச ஒற்றுமையின் மீதோ ஒரு முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறோம், அதனை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் இவ்வளவு பங்கு வகித்திருப்பது பெருமைக்குரியது, நாங்கள் இதனை முன்னெடுக்கிறோம் என்று தமிழக முதல்வர் வந்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ பிரதமர் சொல்லிவிட்டாரே என்று, நாடு முழுவதும் சொல்லிவிட்டனரே வேறு இல்லாமல் செய்துவிடுவோம் என்று பெயரளவுக்கு மாவட்ட ஆட்சியர்களிடம் கொடி கொடுப்பது என்றால் கொடுங்கள் என கூறியுள்ளார். ஒரு தீவிரமான முன்னெடுப்பினை எங்களால் பார்க்கமுடியவில்லை" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT