மதுரை: மதுரை திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது கணக்கில் வராத பணம், நகைகள், ஆவணங்கள் சிக்கின.
மதுரை காமராசர்புரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமா பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளரான இவர் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல், திரையரங்கம், நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமான வரி ஏய்ப்பு செய்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் இவருக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் ஆக.2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தத் தொடங்கினர்.
மதுரை காமராசர் சாலை, கீரைத்துறை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், செல்லூரில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கம், தெற்குமாசி வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் 3-ம் நாளாக நேற்றும் வருமான வரி துறையினர் சோதனை செய்தனர். சோதனை நடந்தபோது ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், சில ஆவணங்கள் கைப்பற்றியதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.