தமிழகம்

போக்குவரத்து ஊழியர்கள் 6ஆம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 6ம் கட்ட ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான நோட்டீஸை போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வழங்கினர். ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டது. இதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT