திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குடும்பத்தாருடன் தர்ணாவில் ஈடுபட்ட ஆலங்காயம் வட்டார பெண் கல்வி அலுவலர் சித்ரா. 
தமிழகம்

ஒருமையில் பேசியதை கண்டித்து வட்டார பெண் கல்வி அலுவலர் தர்ணா: வருத்தம் தெரிவித்த முதன்மை கல்வி அலுவலர்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் சித்ரா(57). நல்லாசிரியர் விருது பெற்ற இவரது தந்தை புலவர் சின்னசாமி (86) என்பவர் கடந்த ஜூலை 13-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையொட்டி, பெண் கல்வி அலுவலர் சித்ரா விடுப்பு எடுத்தார். இதற்கான கடிதத்தை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அய்யண்ணன் பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து, ஜூலை 25-ம் தேதி சித்ரா மீண்டும் பணிக்கு வந்தார். அந்த நேரத்தில் அய்யண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மதன்குமார் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் சிஇஓ மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டத்தில் பேசிய சிஇஓ மதன்குமார், ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா விடுப்பில் சென்றதற்கான காரணம் குறித்து, அவர் யாரிடம் அனுமதி பெற்று பணியில் சேர்ந்தது குறித்து பெண் கல்வி அலுவலரான சித்ராவிடம் விளக்கம் கேட்டார். அப்போது, சிஇஓ மதன்குமார் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில், பெண் கல்வி அலுவலரை ஒருமையில் பேசியதாக கூறப் படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா தனது குடும்பத்தாருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவரை கல்வித்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். பிறகு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில், ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சித்ரா தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து, வருத்தம் தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT