சென்னை: மருத்துவ சிகிச்சை பெற வருபவர்களுக்கு ராணிப்பேட்டையில் விருந்தினர் இல்லம் அமைக்க இட ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நாகாலாந்து முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இது மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.