நகராட்சி தலைவர், ஆணையர், பொறியாளர்களுக்கு 187 வாகனங்கள் வழங்கும் வகையில் புதிய வாகனங்களுக்கான சாவிகளை நகராட்சித் தலைவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். உடன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துறை இயக்குநர் பா.பொன்னையா. 
தமிழகம்

நகராட்சிகளுக்கு வாகனங்கள் ஒப்படைப்பு; தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.29.75 கோடியில் கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதல்கட்டமாக 100 நகராட்சிகளில் தலைவர்களின் அலுவலக பயன்பாட்டுக்காக 91 ஸ்கார்பியோ வாகனங்கள், ஆணையர்கள், நகராட்சிப் பொறியாளர்கள் பயன்பாட்டுக்காக 96 பொலிரோ வாகனங்கள் என மொத்தம் ரூ.23.66 கோடியில் 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகனங்களுக்கான சாவிகளை நகராட்சித் தலைவர்களிடம் வழங்கினார்.

தொழிலாளர் நலன்

உடுமலைப்பேட்டை, நாகர்கோவில், விருதுநகர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை (மகளிர்),தூத்துக்குடி, நாகலாபுரம், நாமக்கல், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐடிஐகளில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்கள், சென்னை - கிண்டி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எனரூ.29.75 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுத்தீன், சென்னைமாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

          
SCROLL FOR NEXT