தமிழகம்

தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம் அருகே சேராங் கோட்டையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 2 நாட்டுப்படகுகளில் அய்யாசாமி, உதயசிங், ராம்குமார், பாண்டி, ராம்கி, கர்ணன், முருகன், வினோத், ரஞ்சித் குமார், சுரேஷ், சதாம், மணிகண்டன், முனியராஜ், மணிக்குமார், நாகராஜ், முத்துக்குமார், ராஜ்கிரண், ஷம்சு, லெட்சுமணகுமார், கணேஷ் ஆகிய 20 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பெரிய நாட்டுப்படகில் இருந்த 18 மீனவர் களை சிறைபிடித்தனர். துணைப் படகில் இருந்த லெட்சுமணக் குமார், கணேஷ் ஆகிய 2 பேர் மட்டும், அவர்களிடம் இருந்து தப்பி நேற்று மதியம் கரை திரும்பினர்.

ராமேசுவரத்தில் லெட்சுமணக் குமார், கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாங்கள் ராமேசு வரத்தில் இருந்து 10 கடல் மைல் தூரத்தில் இந்திய கடற் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தோம். நமது கடற்பகுதிக் குள் அத்துமீறி இலங்கை கடற் படையினர் நுழைந்து பெரிய நாட்டுப்படகில் இருந்த மீனவர் களை கைது செய்து அழைத்துச் சென்றனர். நாங்கள் வேறொரு சிறிய படகில் இருந்ததால் தப்பி வந்தோம் என்றனர்.

ஏற்கெனவே, யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். 114 விசைப்படகுகளை மீட்க வேண்டும் என்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், மீண்டும் 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT