கரூர்: கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 1,800 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கோவை சாலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.
இந்தநிலையில், சட்டவிரோதமாக ஒன்று கூடி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல்லா அளித்த புகாரின் பேரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட 1,800 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.