தமிழகம்

சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மைக்கான பரிசோதனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மைக்கான பரிசோதனை மையத்தை திறந்து வைத்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த மே 6 ஆம் தேதி இங்கிலாந்தில் குரங்கு அம்மை தாக்கம் ஏற்பட்டவுடன் நோய் தடுப்பு நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

இங்கிலாந்தில் தொடங்கிய குரங்கு அம்மை பாதிப்பு 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் டெல்லி, கேரளா, தெலுங்கானவில் குரங்கு அம்மை பாதிப்பு 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரையிலும் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.

மத்திய அரசு இந்தியா முழுவதும் 15 இடங்களில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் குரங்கு அம்மைக்கான ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிங் நோய் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஆய்வகம் அமைத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இனி குரங்கு அம்மை பரிசோதனை எடுத்து அந்த மாதிரிகளை புனேவிற்கு அனுப்பி வைக்க தேவையில்லை கிங்ஸ் மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT