சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான கணக்கீட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் என்பவர்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமையாளரான தனக்கு கடந்த 2022-23-ம்நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியாக ரூ.3,695 வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அரையாண்டுக்கு ரூ.7,170 ரூபாயாக சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூன் 28-ம் தேதியன்று சென்னை மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தெருக்கள், பகுதிகள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான சொத்து வரியை நிர்ணயித்து, அதை அதிகப்படுத்தியிருப்பது அதிகார வரம்பைமீறிய செயல். எனவே தனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்யவேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிஅனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த முறைப்படி சொத்து வரி கணக்கிடப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்யவில்லை. அதையடுத்து நீதிபதி, "சொத்து வரி தொடர்பான கணக்கீட்டு முறை தெரிந்தால் மட்டுமே உயர்த்தப்பட்ட வரி சரியானதுதானா என்பது குறித்து முடிவு எடுக்க முடியும். எனவே வரும் ஆக.3-ம்தேதிக்குள் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
மேலும், அதுவரை மனுதாரருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்படி உயர்த்தப்பட்ட தொகையை வசூலிக்கக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்துள்ளார்.