ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

சென்னை: “கபடிப் போட்டியின்போது உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின்போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமல்ராஜ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கபடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர். சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார். அவரது எதிர்பாராத மறைவால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது.

விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT