சென்னை: சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை போலீஸார் தொடங்கிஉள்ளனர்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக குற்றப் பின்னணி கொண்ட நபர்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாகமாற்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிரான சிறப்பு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைத்து காவல் நிலையபோலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முதல்கட்டமாக, ‘இனி குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன், திருந்தி வாழப்போகிறேன்’ என நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, குற்றச் செயல்களில்ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.தேவைப்பட்டால் குண்டர் சட்டம் பாயும்” என்றார்.
நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர்.