பழநி கிரி வீதியில் உள்ள 40 தள்ளுவண்டிக் கடைகளுக்கு 'கிளீன் ஸ்டிரீட் ஃபுட் ஹப்' என்ற உணவு பாதுகாப்பு தர ஆணையச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரமான முறையில் தரமான உணவுகளைத் தயாரிக்கும் ஹோட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதேபோல், தெருவோரக் கடைகளிலும் விலை குறைவாகவும், தரமானதாகவும் உணவு கிடைப்பதால் அதற்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தரமான உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் ‘கிளீன் ஸ்டிரீட் ஃபுட் ஹப்' (சுகாதாரமான தெரு வோர உணவு மையம்) என்ற சான்றிதழ் வழங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி கிரிவீதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதன் தயாரிப்புகளைப் பரிசோ தித்ததில் கலப்படம் இல்லை என்பது உறுதியானது .இதைத் தொடர்ந்து 40 கடைகளுக்கு 'கிளீன் ஸ்டிரீட் ஃபுட் ஹப்' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், நஞ்சற்ற காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதாக பழநி உழவர் சந்தைக்கு 'கிளீன் அன்ட் பிரஸ்' காய்கறி, பழங்கள் மார்க்கெட் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறுகையில், பழநிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு தள்ளுவண்டிக் கடைகளிலும் சுகாதாரமான, தரமான உணவு கிடைக்கும் என்பதை உறுதி செய்யவே இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது, என்றார்.