இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங் களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது. பல இடங்களில் இயல்பையொட்டியே வெப்பம் நிலவுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் சில நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், 16-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக 15, 16-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.
15-ம் தேதி தென் தமிழகத்தின் அநேக இடங் களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.