சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு வினாத்தாளில் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கேள்வி இடம்பெற்றுள்ளதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ வரலாறு, முதலாமாண்டு படிப்புக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையிலான கேள்வி அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதுவும் தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. பாடப்புத்தகங்களிலும், வினாத்தாள்களிலும் அடிக்கடி இப்படி மாணவச் செல்வங்களின் மனதில் சாதி எனும் நஞ்சை விதைக்கும் விதமான பகுதிகள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது.
இதனைத் தடுப்பதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.