தமிழகம்

மத்திய பல்கலை. முதுநிலை படிப்புக்கான பொது நுழைவு தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டுமுதல் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு பல்கலை. பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதுநிலை படிப்புக்கான சியுஇடி தேர்வு ஜூலைஇறுதியில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் கணினிவழியில் நடத்தப்படவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மே 19-ல் தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் நிறைவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பட்டதாரிகள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஜூலை 19-ம் தேதி வரை செலுத்தலாம்.

மேலும் தேர்வு வழிமுறை, விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் வழியாக விளக்கமும் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று இளநிலை தேர்வு

இதற்கிடையே இளநிலை பட்டப் படிப்புக்கான சிஇயுடி தேர்வு நாடு முழுவதும் 554 நகரங்களில் இன்று (ஜூலை 15) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதிவரை 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்வை 14.9 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT