காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்வழி செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உத்திரமேரூர் வட்டம், ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும்படியும், மாணவர்களுக்கு உணவுபட்டியலின்படி தரமான உணவுவழங்கவும் விடுதி காப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும்விடுதி கட்டிடங்களை பழுதுபார்க்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ளவும் தாட்கோ செயல் பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ரெட்டமங்கலம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் கயல்விழி மாணவர்களுக்கு அரசின் திட்டங்களை தெரிவித்தார். இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.