மதுராந்தகம்: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது மேல்மருவத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர், சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் கரூர் திரும்புவதற்காக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல் மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் கார் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கரூர் மாவட்டம் கடவூர்கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் செந்தில்குமார் (40) அதே இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர் தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.