அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை வேடிக்கை பார்க்கக் கூடாது | இலங்கை அரசை கண்டிக்க வேண்டும்: அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது, இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும், கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது!

கடந்த 10 நாட்களில், மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்!

கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும்!" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT