சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளை சரிசெய்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவின் நகல்கள், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அதிமுக சார்பில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.