தமிழகம்

வாக்குகளை பிரிக்கும் முக்கிய வேட்பாளர்கள்: காங்கயத்தில் முந்துவது யார்?

எம்.நாகராஜன்

2011-ல் தொகுதி மறு சீரமைப்பில் உருவானது காங்கயம் தொகுதி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எட்டக்காம்பாளையம், பசுவபட்டி மற்றும் குப்பிச்சி பாளையம் கிராமங்கள், முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி) ஆகிய பகுதிகளும் அடக்கம். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளை கொண்டது.

விவசாயமே பிரதானம். கீழ்பவானி பாசனம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் 700-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் தேங்காய் பருப்பு உலர்களம், 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளன. வெள்ளகோவில் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் தேங்காய் உலர்களங்களும் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களும் உள்ளன. சென்னிமலை பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட கைத்தறிக் கூடம், 300-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவுச் சங்கம், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. முக்கிய தொழில்களாக, கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி உள்ளது.

தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழிலில், தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வாட் வரி மற்றும் 1 சதவீத செஸ் வரி தொழில்களை நலிவடையச் செய்துள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழில் நலிவை தடுக்கவும், அதனை மேம்படுத்தவும் மின்சாரக் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும். காங்கயத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அல்லது சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த வேண்டும் போன்றவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.

அரசியல் ரீதியாக பார்த்தால் தமிழகத்தில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்குள்ள இடங்களின் பட்டியலில் காங்கயத்துக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இதனுடன் மறுசீரமைப்பில் இணைக்கப்பட்ட வெள்ளகோவில் தொகுதியின் கடந்த கால வரலாற்றின் தேர்தல் வெற்றிகள் காட்டுகின்றன. அதுவே தொகுதி உருவானவுடன் கடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த என்.எஸ்.நடராஜனுக்கு 41,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுத்தது. அவரை அப்போது எதிர்த்தவர் காங்கிரஸ் கட்சியின் விடியல் சேகர். இந்தமுறை என்.எஸ்.நடராஜனுக்கு அதிமுகவில் சீட் இல்லை. மாறாக கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார், காங்கிரஸில் பி.கோபி, தேமுதிகவில் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன், பாஜகவில் மு.உஷாதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

40 சதவீதம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், சுமார் 30 சதவீதம் தலித் சமூகத்தினர் வசிக்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்களும் பெரும்பான்மையோர் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். எனவே ஜாதி ரீதியான கட்சியில் வந்தாலும் குறிப்பிட்ட அந்த சமூக வாக்குகளை முழுமையாக வாங்குவார் உ.தனியரசு என்று சொல்ல முடியாது. அதே சமயம் தலித் சமூகத்தவர்களின் வாக்குகளை வாங்குபவர்களுக்கு சுலபமான வெற்றி என்ற நிலையும் உள்ளது. அந்த வாக்குகள் மற்றவர்களுக்கு எப்படியோ தனியரசுக்கு எதிர் நிலையிலேயே உள்ளது. தேர்தலுக்கு 10 நாள் உள்ள நிலையிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் என்பது என்ன காரணமோ மந்த நிலையிலேயே உள்ளது.

          
SCROLL FOR NEXT